அலைகள் எழுப்பியதாய்
அக மகிழ்கிறாய்.
உனது குமிழிகளை
காலம் உடைத்துப்போடும்போது
பாவம்
உடைந்து போவாய்.
ஏணிப் படிகளில் நின்று கொண்டு
சிகரம் தொட்டாய்
சிலிர்த்துக் கொள்ளாதே.
ஒரு செங்கல் உருவலில்
அடித்தளமில்லா கோட்டைகளை
கலைத்துப் போடுவதுதான்
காலத்தின் வரலாறு.
உனது கத்தி சுழற்றலில்
காயம் பட்ட சகாக்களின்
கசிவை உணராத நீ,
வெகுமக்களிடம் போய்
என்ன உன்னத இலக்கியத்தை
பேசிவிடப் போகிறாய்?
தெருவிளக்கின் வெளிச்சத்தில்
ஜொலிக்க ஆரம்பித்த நீ
போக்கஸ் லைட்களின் பின்னாலா
போவது?
வெளியே மட்டுமே
வெளிச்சம் இல்லை.
உனது அறை இருட்டை விரட்ட
தோழர்களிடம் சுடர் தேடு.
ஒற்றை நட்சத்திரமாய்
ஒளிர்வதைவிட
ஆயிரம் சுடர்களேற்றும்
அகலாவது முக்கியம்.
நேர்படப் பேசுவது உறுத்துவதால்
உளறல்களின் நுரைகளில்
கரைந்து போகாதே.
உனக்கொருமைச் செட்டையும்
மற்றவர்களுக்கு ஹியரிங் எய்டையும்
தந்திருப்பதாக தப்பிதமாக
கற்பிதம் செய்யாதே.
கர்வம்
விரலுக்கான மோதிரமல்ல
வெட்டி எறியப்பட வேண்டிய நகம்
எந்த மாற்றமும் முழு மாற்றமில்லை.
காணும் காட்சிகள்
தோற்ற பிழையல்ல
தோற்றப் பிழை என விளங்கு.
எட்டுத் திசையிலும் கைகளை வீசி
வெற்றி மாலைக்கு பூப்பறி
உன்னிடமிருந்தே மாற்றத்தை
உருப்படியாய் இனி தொடங்கு.