
கவிதை ஒரு கலை;
அதை பரிமாறும் தளம் நாங்கள்.
உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை தான் வார்த்தைகளில் வடிக்கிறோம் கவிதைகளில்
உங்கள் வாழ்க்கையில் நடந்தவற்றை தான் வார்த்தைகளில் வடிக்கிறோம் கவிதைகளில்
சாப்பிட்டு படுக்கப் போய் - மீண்டும் சாப்பிட்டு மொத்த நாட்களும் செத்த நாட்களாய் இருப்பதில் என்ன இருக்கிறது?பயந்து பயந்து கழிக்கும் பொழுதுகளால் பயன் என்ன? நாளொன்று கழிந்தது என்பதன்றி. மின்மினி கூட ஒளிர்ந்து விட்டுத்தான் செத்துப் போகிறது. வெள்ளம் வடிந்தபின் சுவடுகள் கிடக்குமே அப்படி சாவுக்குப்பின்/ ஒரு சரிதம் வேண்டும். அப்படியே ஏற்று அமைதியாவது. அதிசயம் நிகழக் காத்திருப்பது. முதல் முயற்சியில் தோல்வியும் கிடைக்கலாம். முதலில் முயன்றதே வெற்றிதானே.
டீக்கடைப் பெஞ்சில் அரசியல் பேசி வீட்டுக்கு வந்ததும் மறந்து போவாய். விலைவாசி குறைக்கஊர்வலம் போகையில் கேலியாய்ச் சிரித்து ஒதுங்கிப் போவாய். மாமூல் பற்றி மனம் குமுறுவாய். காரியம் நடக்க கவரை நீட்டுவாய். நீதி நியாயம் நிறையப் பேசுவாய். அநீதி நடக்கையில் கண்களை மூடுவாய். வார்த்தையில் ஒன்று வாழ்க்கையில் ஒன்று எப்போதும் உனக்கு இரண்டு முகங்கள். இப்படியே நீ இருக்கும் வரையிலும் மாற்றம் வராது மனதில் கொள்வாய்.
பையனாய் இருக்கையில் ஐயனார் மீசை மீது ஆசையாய் இருக்கும். பாரதி வரிகளைப் படித்த காலத்தில் கரியால் மீசை வரைந்துமுறுக்கி விடுவேன். 'எடுக்க எடுக்கத்தான் காடாய் வளருது' அப்பாவின் சலிப்பில் பொறி தட்ட ரகசியமாக ரேசர் எடுப்பேன். பூனை முடியாய் அரும்பிய நாளில் சிகரத்தைத் தொட்டதாய் சிலிர்த்துப் போனேன். படித்து முடித்து அதிகாரி ஆனதும் தினசரி ஷேவிங் திருத்திய மீசை. நறுக்கிச் செதுக்கிய கருப்புச் சிற்பத்தை தடவியபடியே விசாரணை யோசனை கண்களை மூடிக் கனவில் மிதப்பேன். வேலைக்கு அலைந்து வெறுமையாய் உணர்ந்து முகத்து முட்கள் பிறரை உறுத்த எப்போதாவது இப்போது வைக்கையில் கண்ணாடியில் நான் கரப்பான் பூச்சி.
எனக்கு நன்றாய் நினைவிருக்கிறது. அந்த வீட்டுக்குப் போகும் போதெல்லாம் ஆச்சர்யத்தோடு பார்ப்பேன்.வரிசையாய் இருக்கும் பெரிசாய் பானைகள். பழம்புளிக்கு இரண்டு இனிப்புக்கு ஒன்று. உருட்டி உருட்டி, புளி எடுத்து ஊரே மணக்க அந்த அம்மாள் புளிக் குழம்பு வைத்தால் அதற்காகவே ஒரு தட்டுச் சோறு அதிகம் சாப்பிடலாம். ரசம் இனிப்பாய் இருந்தால்தான் இளையவனுக்கு பிடிக்குமென்று தனியாய்ச் செய்வாள். மகள் மறு வீடு போன அன்று கட்டிக் கொடுத்த புளிசாதம் சாப்பிட சம்பந்தி வீட்டாரிடையே புருஷன் செத்துப் போக பிள்ளைகள் வீசியெறிந்த கைவிட்டுப்போக புளிச் சக்கையாய் அவள். உள்ளூர்க் கோயிலின் உற்சவத்தில் இலவசமாய் வழங்கும் புளிசாதப் பொட்டலங்களை நடுங்கும் கைகளோடு அவள் வாங்குவதைப் பார்க்கையில் மனசுக்குள்ளொரு கேள்வி. "அந்தப் பானைகள் இப்போது பரண்மேல் கிடக்குமோ?”
எவரிடமும் சொல்லாதே என எல்லோரிடமும் சொல்வது. ரகசியம் அடுத்தவர் குறித்தெனில் ஆர்வம்.நம்மைப்பற்றி எனில் சோர்வோம். அழகின் ரகசியம் புன்னகை. வெற்றியின் ரகசியம் முயற்சி. வாழ்க்கையின் ரகசியம் மாற்றம். வெற்றியின் ரகசியத்தை விளக்க வேண்டும். தோல்வியின் ரகசியத்தைப் புதைக்க வேண்டும். இராணுவ ரகசியத்தைப் பாதுகாக்க வேண்டும். கவிதை ரகசியத்தை ரசிக்க வேண்டும். காதல் ரகசியத்தை ருசிக்க வேண்டும். ரகசியம் குறித்த ரகசியம் தெரியுமா? ஒரு சில பேருக்குத் தெரிந்தால்தான் அது ரகசியம். ஊருக்கே தெரிந்தால் அது சுவாரசியம்.
உலக மொழிகளில் திலகமொழி தமிழ். உச்சரிக்கும் போதே உற்சாகம் பிறக்கும். எழுதிப்பார்க்கையில் ஏடுகள் மணக்கும்.நேர்முனை எதிர்முனை இவற்றை இணைத்தால் மின்சாரம் பிறக்குமாம். பேனா முனையிலிருந்து பிறக்கும் மின்சாரம் தமிழ். நம் அன்னைத் தமிழில் ஆண்டுக்கணக்காய் மூன்று தானா? ஆட்சித் தமிழ் மட்டுமென்ன ஆகாதா? தமிழால் முடியும் தமிழால் முடியாவிட்டால் எதனால் முடியும்? யாப்புத் தமிழில் கோப்புகள் வரட்டும். சங்கத் தமிழ் தொழிற்சங்கத் தமிழாகட்டும் நீதித்துறை நிதித்துறை பணியாளர் விதித்துறை எல்லாத் துறைகளிலும் வெல்லத் தமிழ் இடம் பெறட்டும். மருந்துச் சீட்டுகள் தமிழில் மதிப்பெண் அட்டைகள் தமிழில் பொருந்தும் இடத்திலெல்லாம் புகுந்து வரட்டும். மற்ற மொழிகளெல்லாம் கற்றுக்கொள்ள. தமிழ்மொழி மட்டும் பற்றுக்கொள்ள. ஆங்கிலத்தால் தான் எல்லாம் முடியும் என்ற எண்ணம் விடுவோம். அரசு எந்திரத்திற்குத் தமிழ் எண்ணெய் இடுவோம். கணினியில் வரட்டும் கனித்தமிழினி. இனி பென்சில்களை அல்ல நாம் உணர்வுகளைக் கூர்தீட்டுவோம். ஊர் கூடித் தேர் இழுப்போம் உயரத்தில் தமிழை வைப்போம்.